காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர் என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது. வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது. இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி. இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்.
சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.
Comments
Post a Comment