கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை. தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள்.
செஞ்சி கோட்டை
கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.
சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன். காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன். 2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள்.
அக்கால கொடூர கனவுகளிலிருந்து மீண்டுவிட்டேன் போலும், அத்தகைய கனவுகள் வருவது முற்றிலும் ஒழிந்து விட்டது. நிகழ்காலத்தில் வரும் கனவுகள் சிறு வயது கனவுகள் போல மிகுந்த ரசனையாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் அவ்வப்பொழுது சில ரசிக்குற மாதிரியான கனவுகள் தோன்றுகிறது.
பல வருடங்கள் தேங்கி இருந்ததால் தான் என்னவோ சில விஷயங்களில் பொது நீரோட்டாத்தில் கலக்க முடிவதில்லை. அது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய சமயத்தில் கனவில் கிடைத்த விடை தான் சட்டம். மிகுந்த சிரமேற்கொண்டு ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் பின்பற்றி நடக்கிறேன். அது என்னுடைய அன்றாட வாழ்வை மிகவும் எளிமையாக்குகிறது.
கனவின் தீர்வுகள் நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்லும் போதிலும், ஒரு சில இடங்களில் மட்டும் அதனால் சில பின்விளைவுகளை சந்திக்கிறேன். உதாரணத்திற்கு., தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் ஒரு சிக்னல் உள்ளது. வழக்கமாக சிவப்பு போட்டாலும் அந்த சிக்னலின் மக்கள் யாரும் நிற்பதில்லை. நான் மட்டும் நின்றதில் சிலரிடம் திட்டு வாங்க நேரிட்டது.
இன்னொரு உதாரணமாக குப்பையை குப்பை தொட்டியில் போட வேண்டுமென்பது; கவரை பிரித்து அருகிலெதுவும் குப்பை தொட்டி இல்லையென்றால் என்னுடைய பாக்கெட்டில் வைத்து கொள்வேன், அது அவ்வப்பொழுது கிண்டலடிக்கப்படுகிறது. போலவே முன் போல ஏதேனும் சமயத்தில் தேங்குவது போலவோ, குழப்ப மனநிலையோ இருந்தால் ஒரு சில நாட்களின் கனவு தெளிவாக்கி விடுகிறது.
விடை தெரிந்தும் அதனை நேரிடையாக எதிர் கொள்ள துணிவு இல்லாமல் போக அதனை ஆழ்மனது கனவு மூலமாக வழி காட்டி தீர்வை நோக்கி என்னை கடத்துகிறது என்றே நினைக்கிறேன்.
Comments
Post a Comment