தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான். அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது. கால்களும், கைகளும் தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.
அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை. வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது. இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல தான் இன்றைய முன்னேற்றம் சரியா தவறா எனும் வாதமும்... வாங்க நடந்துகிட்டே பேசலாம்.நடைபயிற்சி என்பது மிக எளிது போல தோன்றினாலும் அதனை போல மிக கடினமான ஒன்று கிடையவே கிடையாது. அதிகாலை நடைபயிற்சி என ஆரம்பித்த பலரின் இடைநிற்றலின் காரணம் நியாயமாக இருப்பது போலவே இருக்கும் மாயத்தோற்றம் என்பது தான் இதிலிருக்கும் கொடுங்கூற்று. நேரமில்லை, காலையில் பனி அதிகம், தெருநாய் தொந்தரவு, இன்னைக்கு தூங்கிட்டேன் என ஆரம்பித்து கால் வலிக்குது, போரடிக்குது என்பதாய் காரணம் நீளும். அதுபோல எனக்கும் காரணம் இருக்கும்தானே!?
நடைபயிற்சி ஆரம்பிக்க காரணம் உண்டு, நடைபயிற்சியை தொடர முடியாமல் போக காரணம் உண்டு, நடைபயிற்சியை நிப்பாட்ட காரணம் உண்டு, நடைபயிற்சிக்கென சில உபகரணங்கள் வாங்கியதும் உண்டு. இவ்வாற் நிறைய உண்டுகள் அவரவரின் நிலைக்கேற்ப இருக்கும். என்னுடைய உண்டுகள், இலங்கள் என்னென்ன?
வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் பார்க் தான் நான் நடைபயிற்சிக்கு தேர்ந்தெடுத்த இடம். வாக்கபிள் டிஸ்டன்ஸ் என சொல்ல முடியாது எனும்போதிலும் அவ்வளவு தொலைவு கிடையாது என்றே சொல்லலாம். சைக்கிளில் செல்வது தான் வாடிக்கை. அங்கு மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் தான் அதிகம். நடைபயிற்சிக்கென தனி சீருடையில் நிறைய பேரை நான் பார்த்தது இங்குதான். அதீத வேர்வை காரணமாக வாடை வந்து விடுகிறதாகையால் தனி உடை என்பதும் பிற்பாடு கொண்ட புரிதல்தான்.
பார்க் செல்ல வாக்கிங் ஷூவும் இப்பொழுது வாங்கியுள்ளேன். அதனை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் செப்பல் அணிவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டேன், பாதத்திற்கு அவ்வளவு கம்பர்ட் கொடுக்கிறது. கடந்த சிறு விபத்து காரணமாக சைக்கிள் அரை வருடம் மேலாக எடுக்கபடாமல் போயிற்று, மிகுந்த தூசியாய் இருப்பதை துடைத்து பயன்படுத்தி பார்க்க வேண்டும், சரியாக இல்லாத பட்சத்தில் மீண்டும் ஓவர் ஆயில் போட வேண்டும். சைக்கிள் தவிர்த்து பார்த்தோமானால் அலாரம் முதற்கொண்டு அனைத்தும் தயார். நாளை காலை நடைபயிற்சி கிளம்புவேன் என்றே எண்ணுகிறேன்.
வேர்வை மற்றும் வாடை காரணத்திற்காக வாக்கிங் தடைபடாது, அதற்கென தனி உடை இருக்கிறது. செருப்பு போட்டு நடந்தால் ஒரே வாரத்தில் பாதம், முட்டி வலிக்கிறது, அதற்கென வாக்கிங் ஷு மற்றும் முட்டிக்கு பேண்ட் இருக்கிறது. நடை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கொடூர பசி எடுக்கிறது, அதனை போக்க முட்டை தயாராக இருக்கிறது. விடிகாலை அலாரம் விழிப்புடன் இருக்கிறது.
நாடோடியாய் வாழ்ந்த மனிதனிடம் போய் இன்றைய மனிதர்களின் வாக்கிங் பற்றி சொன்னால் என்ன நினைப்பான்?

Comments
Post a Comment